புதுடில்லி: தற்போதைய, 15வது லோக்சபாவின், மூன்றாவது ஆண்டில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆகியோர் மிகக் குறைவான நாட்களே சபைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, தற்போதைய, 15வது லோக்சபாவின் மூன்றாவது ஆண்டில் (2011 மே முதல் 2012 வரை), எம்.பி.,க்களின் வருகை குறித்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2011 மே முதல் 2012 மே மாதம் வரை நடந்த லோக்சபாவின் மொத்தம், 85 அமர்வுகளில், ராகுல், 24 நாட்கள் மட்டுமே, சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
தற்போதைய உ.பி., முதல்வரும், முன்னர், எம்.பி.,யாக இருந்தவருமான, அகிலேஷ் யாதவ், 31 நாட்கள் கலந்து கொண்டுள்ளார். பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகிய இருவரும், 16 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
"2ஜி' வழக்கில், கைதாகி சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நான்கு நாட்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, 30 நாட்களும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, 25 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சபை நடந்த, 85 நாட்களில், 34 நாட்கள் சபைக்கு வந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், பெரும்பாலான நாட்கள் வரவில்லை. அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களான நிர்மல் கத்தாரி, பி.எல்.புனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆகியோர், லோக்சபா நடந்த, 85 நாட்களிலும் சபைக்கு வந்துள்ளனர். லோக்சபா நடந்த, 85 நாட்களில், 110 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 175 மணி நேரம், 51 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தமட்டில், சோனியா, 2.32 கோடி ரூபாயும், அத்வானி 1.71 கோடி ரூபாயும், சுஷ்மா சுவராஜ் 8.58 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment